Monday, January 17, 2011

ஐயப்ப பக்தர்கள் மரணத்தை தழுவியதற்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள்

பத்தினம்திட்டா: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 100க்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியதற்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற மகரவிளக்கு தரிசனத்தை கண்டு விட்டு புல்மேடு நோக்கி சுமார் இரண்டை லட்சம் பக்தர்கள் திரும்பியுள்ளனர். அப்போது ஏராளமான வாகனங்கள் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளன. பயணிகளை ஏற்றி வந்த வாடகை ஜீப் ஸ்டார்ட் ஆகாமல் போகவே அதனை பக்தர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியி்ல் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜீப் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அது ஆட்டோ ரிக்ஷா மீது மோதி, புறப்பட தயாராக இருந்த மினி பஸ் மீது மோதியுள்ளது.

அதைத் தொடர்ந்து ஏற்பட் களோபரத்தினால் பக்தர்கள் சிதறி ஓட, மிகக் குறுகிய அந்த இடத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் கீழே விழுந்து மிதிபட, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பக்தர்கள் இருபுறமும் இருந்த தற்காலிக கடைக்களுக்குள் திபுதிபுவென புகுந்துள்ளனர்.


இதில் கடையில் இருந்த பொருட்கள் கீழே சரிய, கோபமான கடைக்காரர்கள், பக்தர்களை கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் கடைகளுக்குள் இருந்து பக்தர்கள் வெளியே திரும்பி வெளியே ஓடி வர, கடைகளுக்குள் வர முயன்றவர்களும் இவர்களும் எதிரெதிரே மோதிக் கொண்டு தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் மேலும் பலரும் கீழே விழுந்து மிதிபட்டுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி கீழே விழுந்துவிடாமல் இருக்க சாலையி்ன் இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பு சங்கிலிகளை பக்தர்கள் பிடித்து தொங்க, அந்த தடுப்பு சங்கிலி எடை தாங்காமல் மொத்தமாய் அப்படியே பெயர்ந்துள்ளது.

இதனால் ஏராளமான பக்தர்கள் இருண்டு கிடந்த பள்ளத்துக்குள் விழுந்துள்ளனர். மகரஜோதியை கண்ட புல்மேடு உப்புபாறையில் இருந்து மரண ஒலியோடு பக்தர்கள் பள்ளத்துக்குள் சரிந்து விழுந்து உயிரை இழந்துள்ளனர்.

போதிய மின் வசதிகளும் இல்லாத சூழலும், இரண்டரை லட்சம் ஐயப்ப பக்தர்களை ஓழுங்குபடுத்த வெறும் 5 போலீசார் மட்டுமே அங்கு பணியில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஜீப் ஒரு காரணம் என்றாலும் உயிரை காப்பாற்ற கடைக்குள் புகுந்த ஐயப்ப பக்தர்களை விறகு கட்டைகளால் தாக்கி விரட்டிய அந்த பகுதி கடைக்காரர்கள் தான் மிக முக்கிய காரணம் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கேரள அரசு தீவிர நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டி தக்க தண்டனை பெற்று தர வேண்டும்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது கேரள காவல்துறையினர் காட்டுமிராண்டிதனமான தாக்குதலை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் புல்மேட்டில் பெரிய வாகனங்கள் நிறுத்த வண்டிபெரியார் முதல் வல்லகடவு செக்போஸ்ட் பகுதியில் கோழிக்காணம் பகுதி ஓதுக்கப்பட்டும், தவறான அணுகுமுறையால் இந்த வாகனங்கள் அங்கு நிறுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சபரிமலை வரலாற்றில் நடந்த மிகப்பெரிய முக்கிய விபத்து இதுதான். 1952ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி 66 பேர் பலியாகினர். 1999ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிலச்சரிவில் 53 பேர் பலியாகினர். இந்த விபத்துகள் அனைத்தும் மகர ஜோதி தரிசனம் சமயத்தில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் உண்டியல் வசூல், வாகன வசூல் என பல்வேறு வழிகளில் பல நூறு கோடிகளை குவிக்கும் தேவஸ்தனமும் சரி, கேரள அரசும் சரி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் காசி்ல் மட்டுமே குறியாக இருப்பதை விட்டு விட்டு அவர்களது உயிரையும் பாதுகாக்கும் வண்ணம் சாலை வசதி, பாதுகாப்பு வசதி, உள்ளிட்டவைகளை இந்த 109 மரணத்துக்கு பிறகாவது சீரமைக்க வேண்டும்.